சிலம்பம்
சிலம்பத்தின் வரலாறு
சிலம்பம் – தமிழரின் பாரம்பரிய தற்காப்புக் கலை
-
சிலம்பம் என்பது தமிழர்களால் உருவாக்கப்பட்ட ஒரு மாபெரும் தற்காப்புக் கலை ஆகும். மனிதன் குரங்கிலிருந்து பரிணாம வளர்ச்சி அடைய தொடங்கிய காலத்திலேயே, தன்னை பாதுகாத்துக் கொள்வதற்காக கல் மற்றும் கம்புகளை பயன்படுத்தத் தொடங்கினான். இதுவே சிலம்பக் கலையின் ஆரம்பம் ஆகும்.
-
சிலம்பத்தில் காணப்படும் பல பாட முறைகள் ஒரே மனிதரால் உருவாக்கப்பட்டவை அல்ல. பல்வேறு காலங்களில் மக்கள், தங்கள் வாழ்வியலுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்ப இந்த கலையை வளர்த்துள்ளனர். ஒவ்வொரு சமூக மக்கள் தங்களைப் பாதுகாக்க, அவர்கள் சந்தித்த மிருகங்களின் இயல்புகளை ஆய்ந்து, தன்னை தற்காத்துக் கொள்ள புதிய உத்திகளை உருவாக்கினார்கள்.
-
அந்தக் காலத்தில், மக்கள் மாதம் ஒரு முறை அல்லது வாரம் ஒரு முறை சந்தையில் கூடினர். அங்கு, ஒவ்வொரு ஊர்களிலிருந்து வந்தவர்களுடன் தாங்கள் கண்டுபிடித்த புதிய சண்டை உத்திகளை பரிமாறிக்கொண்டனர். இதன் மூலம் சிலம்பம் தொடர்ந்து பரவியது மற்றும் பல்வேறு வடிவங்களில் வளர்ந்தது.
சிலம்பக் கலையில் உள்ள வித்தியாசங்கள் மற்றும் அதன் காரணங்கள்
தமிழ்நாட்டில், சிலம்பக் கலை மாவட்டத்துக்கு மாவட்டம் மாறுபட்ட விதத்தில் கற்பிக்கப்படுகிறது. பயிற்சி முறைகள், பாணிகள் மற்றும் சுற்று இயக்கங்களுக்கு கொடுக்கப்படும் பெயர்கள் கூட மிகவும் மாறுபடுகின்றன.
இந்த வித்தியாசங்கள் முக்கியமாக மூன்று காரணங்களால் ஏற்பட்டுள்ளன
சாதி அடிப்படையிலான பாணிகள்
பல்வேறு சமூகங்களும் தங்களது வாழ்க்கை முறையின்படி சிலம்பத்தை தனித்துவமாகப் பயின்றனர்
-
அய்யங்கார் வரிசை – பிராமண சமூகத்தை சார்ந்த பாணி.
-
துலுக்கன் – தமிழ் முஸ்லிம் சமூக பாணி.
-
குறவஞ்சி – நடமாடும் மற்றும் கலைஞர் சமூகங்களை பிரதிபலிக்கும் பாணி.
-
பனை ஏறி மல்லு – ‘மல்லு’ என்பது சண்டை பாணியை குறிக்கிறது; பனை ஏறும் தொழிலாளர்களின் பாணி.
புவியியல் அடிப்படையிலான பாணிகள்
இவை இயற்கை சூழல் மற்றும் நிலப்பரப்பைப் பொறுத்து உருவானவை
-
துடு காண்டம் – சமவெளி பகுதிகளில் இருந்து வந்த பாணி.
-
மரக்காணம் – கடலோர கிராம பாணி; தனிப்பட்ட தற்காப்பு நடைமுறைகள் கொண்டது.
-
கர்நாடக வரிசை – கர்நாடகத்தின் தாக்கம் கொண்ட எல்லைப்பகுதி பாணி.
பிற மொழி தாக்கங்களுடன் கூடிய பாணிகள்
வெளிநாடுகள் மற்றும் வர்த்தகச் சந்தைகள் வழியாக வந்த வார்த்தைகள்
-
உடான்
-
பகுல்
-
பாஸ்கி
-
கிறுகி
இவை தமிழ் அல்லாத சொற்களால் உருவான பாணிகள். இவற்றால் இந்த கலையில் நிலையான விதிகள் காணப்படவில்லை.
சிலம்பம் – மரபும் மாற்றமும்!
சிலம்பம் பல்வேறு பாணிகள் இருந்தாலும், இன்று இது ஒற்றுமையான ஒரு தமிழர் கலையாக மாறி, நமது பாரம்பரியத்தின் அடையாளமாக திகழ்கிறது.
ஒற்றுமைக்கான ஒரு முயற்சி
இந்த வித்தியாசங்களும் கருத்து முரண்பாடுகளும் தவிர்க்கப்பட வேண்டும் என்பதற்காக திரு. த. கதிரவன் அவர்கள், தமிழ் அல்லாத சொற்களை தமிழில் மொழிபெயர்த்தார். மேலும், சாதி அடிப்படையிலான பெயர்களையும் அகற்றினார். இதன் மூலம், சிலம்பக் கலை ஒருமைப்படுத்தப்பட்டது, பொதுமக்கள் அனைவரும் எளிதில் கற்றுக்கொள்ளும் வகையில் உருவாக்கப்பட்டது.
சிலம்பம் பெயருக்கான காரணங்கள்
சிலம்பம் என்ற பெயர் வர காரணம் ஒவ்வொரு பகுதிகளிலும் ஒவ்வொரு மாதிரியாக கூறப்படுகிறது. இதற்கு சரியான காரணம் சிலம்பம் கலையை முறையாக வடிவமைத்து கொடுத்தவர், "முருகக் கடவுள்" ஆவார் இவருக்கு சிலம்பரசன் என்ற மற்றொரு பெயரும் உண்டு. இவர் தமிழ் கடவுளும் ஆவார். இவர் புராண காலங்களில் 'சேவகப் போர் தளபதியாகவும்' திகழ்ந்து விளங்கியவர்.இவருக்கு 'சிலம்பரசன்' என்ற பெயரும் உண்டு. அவர் மூலமாக இக்கலை உருவானதால் சிலம்பம் என்ற பெயர் தோற்றுவிக்கப்பட்டது. இந்த கலை மத சார்பாக கொண்ட கலையாக மாறிவிடும் என்பதால் இந்த காரணத்தை மறைத்து விட்டார்கள்.
சிலம்பம் பெயரின் அர்த்தங்கள்
சி + லம் + பம் = சிலம்பம்
-
சி - என்பது உயிர்சக்தி உள் ஆற்றலை குறிக்கும்
-
லம் - என்பது ஆயுதங்களின் செயல்பாட்டால் ஏற்படும் ஓசையைக் குறிக்கும்.
-
பம் - என்பது உயிர் சக்தியை அதிகப்படுத்துவது ஆகும்.
சிலம்பாட்டம் பெயருக்கான காரணங்கள்
ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில், சிலம்பத்தில் பயன்படுத்தப்படும் பல போர் கருவிகள் ஆபத்தானவை என கருதப்பட்டு தடைசெய்யப்பட்டன. இதனால்(பல சிலம்பப் பயிற்சி கூடங்களும் மூடப்பட்டன), அப்போது வாழ்ந்த மக்கள், இந்தபாரம்பரிய கலையை காக்கும் நோக்கில், அதனை “சிலம்பாட்டம்” என்ற பெயரில் ஒரு அலங்காரக் கலையாக மாற்றினர். இந்த மாற்றத்தின் போது, தீபந்தம் சுற்றுதல், கயிற்றில் ரிப்பன் கட்டி சுற்றுதல் என பல அலங்கார முறைகள் உருவானது. இவ்வாறு, சிலம்பம் தமிழர்களின் வாழ்க்கை முறையோடு இணைந்து வளர்ந்த ஒரே கலை மட்டுமல்ல, அது ஒரு பண்பாட்டு அடையாளமாகவும் திகழ்கிறது.